சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது.
எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார், படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார்.
தனது இந்தப் படம் உலக அளவில் பேசும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் வி ஆனந்த். அவர் கூறுகையில், " எப்பொழுது ஒரு படம் மனித உறவுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி பேசுகிறதோ அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருக்கும்," என்கிறார்.
தன் படமும் இந்த வரையறைக்குள் வரும் என அழுத்தமாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆனந்த்.