ஏ எல் விஜய் அடுத்து இயக்கும் படத்துக்கு சைவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என யாரும் இல்லை. குழந்தை நட்சத்திரமான சாராவைச் சுற்றித்தான் கதையே நடக்கிறதாம். பெரிய சிக்கலுக்குப் பிறகு வெளியான தலைவா படத்தை ஊரே அக்கு வேறு ஆணி வேறாக அலசி தொங்கப் போட்டுவிட்டார்கள்.
அது எத்தனைப் படங்களின் உல்டா என்பதையும் கூறிவிட்டார்கள். இந்த நிலையில், தனது அடுத்த படத்தை பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் என யாருமில்லாமல் துவங்குகிறார் இயக்குநர் விஜய்.
இந்தப் படத்துக்கு சைவம் என்று தலைப்பு வைத்துள்ளார் விஜய். அசைவமயமாக இருக்கும் கிராமத்தை, ஒரு குழந்தை எப்படி சுத்த சைவமாக மாற்றுகிறாள் என்பதுதான் கதையாம் (இந்தக் கதைக்கான டிவிடி எது என எப்போது செய்தி வெளியாகப் போகிறதோ) இந்தக் கதையில் நாயகன், நாயகி என யாருமே இல்லையாம்.
தெய்வத் திருமகளில் நடித்த பேபி சாராதான் கதையின் மைய பாத்திரமாக நடிக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உதவ ஒப்புக் கொண்டுள்ளாராம்.