சென்னை: நய்யாண்டி படத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜவினர் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை, மாத்தூரை சேர்ந்தவர் முத்து ஆர்.வெங்கட்ராமன்.
திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தனுஷ் நடித்துள்ள ‘நய்யாண்டி' என்ற படம் டி.வி. சேனல்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
அந்த விளம்பர காட்சியில், தனுஷ் மற்றும் 2 நடிகர்கள் ஜாதகம் போல் ஒன்றை வைத்துக்கொண்டு, எனக்கு இந்த பெண் வேண்டாம் என்று பேசும் வசனம் வருகிறது.
அந்த ஜாதகம் போன்ற அட்டையில் இந்து மதத்தினர் பெரிதும் நம்பிக்கையுடன் வழிப்படும் பெண் தெய்வம் லட்சுமியின் படம் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாடும் நேரத்தில், இப்படி இந்து மதத்தையும், இந்து கடவுளையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காட்சியை எடுத்துள்ளார்கள்.
எனவே, அந்த சர்ச்சைக்குரிய காட்சியை ‘நய்யாண்டி' படத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வெங்கட்ராமனை அனுப்பி வைத்தது போலீஸ்.