சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன் பெயரில் பண மோசடி நடக்கிறது, என்று இயக்குநர் பாண்டிராஜ் பரபரப்பாகக் புகார் கூறியுள்ளார்.
பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என வெற்றிப் படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். தற்போது சிம்புவை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்த நிலையில் தன் பெயரில் பண மோசடி நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மோசடி செய்பவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பாண்டிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிக்க சான்ஸ் தருவதாக என் பெயரில் மோசடி நடக்கிறது.
சினிமா நடிகர், நடிகைகள் முகவரி புத்தகங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் புதுமுகங்கள் செல்போன் நம்பருடன் தங்கள் படங்களை இடம் பெறச் செய்துள்ளனர்.
அந்த நம்பருக்கு பாண்டிராஜ் மானேஜர் பேசுறேன் என்று சில மோசடியான ஆட்கள் தொடர்பு கொண்டு, 'புதுமுகங்களை வைத்து படம் எடுக்கிறோம்... உங்களை எங்கள் டைரக்டருக்கு பிடித்துவிட்டது.
நடிப்பதற்கு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். ரூ.49 ஆயிரம் கொடுத்து விடுங்கள்,' என்று ஏமாற்றுகின்றனர்.
ஏற்கனவே சசிகுமார், பிரபுசாலமன் பெயர்களில் இதுபோல் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.