சென்னை: ஏற்கெனவே அறிவித்து நின்று சுல்தான் - தி வாரியர் மற்றும் ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இயக்குநர் சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் முதல் 3டி திரைப்படம் 'கோச்சடையான்'. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ருக்மினி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற எங்கே போகுதோ வானம்... இன்று வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தில் வரும் ரஜினியின் தோற்றம் சுல்தான் தி வாரியரை நினைவுபடுத்துவதால், அந்தக் கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் இருக்குமோ என சிலர் கூறியிருந்தனர். மேலும் ராணாவின் கதையைத்தான் கோச்சடையானாக எடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வரும் சவுந்தர்யா, இப்போது மேலும் ஒரு முறை மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தப் படம் சுல்தான் தி வாரியரோ, ராணாவோ கிடையாது. அந்தப் படங்களில் இருந்து 'கோச்சடையான்' முற்றிலும் வேறுபட்டது. சுல்தான் தி வாரியரை ஏற்கெனவே கைவிட்டுவிட்டேன். அந்தப் படத்துக்காக செய்த செய்த எதையும் கோச்சடையானில் பயன்படுத்தவில்லை.
'அவரை என் அப்பாவாக நினைத்து இயக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்களில் ஒருத்தியாக நினைத்துதான் இயக்கினேன்," என்றார்.