அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை. அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர். அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.
இதோ அவரது 'தல' புராணம்: "அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம்... ஆனால் அவ்வளவையும் எழுத முடியாதே.. நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத் சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார்.
'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார். அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம்.
நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது', என்றார். நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்க வைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம்.
110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம். அஜீத்... என்ன மனுஷன் இவர்!- பாலாவின் பிரமிப்பு அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார். சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார். 'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்," என்றார்.