சென்னை: தமிழுக்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகளைச் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா எனக் கூறி, நன்றி தெரிவித்துள்ளார் கவிஞர் சினேகன். ஆரம்பத்திலிருந்தே அதிமுக அபிமானியான கவிஞர் சினேகன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு பேரினத்தை ஒரு மொழிதான் அடையாளம் காட்டுகிறது. ஒரு மொழியை ஒரு இனம் தாங்கிப் பிடிக்கிறது.
மூத்த இலக்கணமும் முதல் இலக்கியமும் கண்ட மொழி தமிழ். உயர்ந்த பண்பாடும் பரந்த கோட்பாடும் கொண்டவன் தமிழன்.
பக்தி இலக்கியம் தொட்டு கணிணி இலக்கியம் வரை எண்ணற்ற பரிமாணங்களைக் கடந்தும், இன்றும் கூட இனிமை குறையாதது, செழுமை குறையாதது நம் மொழி.
தமிழையும் தமிழர்களையும் காக்க, அரியதோர் சிந்தனையாய், அளவற்ற கருணையாய், அறிவார்ந்த நோக்கத்தால், மொழியையும் இனத்தையும் மூச்சுக்காற்றாய் முகர்ந்து, நம் பண்பாட்டைப் பாதுகாக்கவும் உலகறியச் செய்யவும், வளரும் தலைமுறைக்கு மொழியின் சிறப்பை முன்னெடுத்துச் செல்லவும்
திருக்குறளுக்கு ஓவியக் காட்சிக் கூடம், உலகத் தமிழ் பண்ணாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் தொல்காப்பியர் ஆய்வறிக்கைக்கு ஒரு அடித்தளம் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடம் -என வரலாற்று சிறப்பு மிக்க பணிக்கு கருணையுள்ளத்தோடு உத்தரவிட்ட, தமிழ் இனத்தின் தாயாக விளங்கும் தமிழக முதல்வருக்கு நன்றி," என்று கூறியுள்ளார்.