மதுரை: தவறான எண் கொண்ட டாடா சுமோ விற்ற வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமான டிராக்டரின் பதிவு எண்ணை, டாடா சுமோ காரின் பதிவெண் எனக் கூறி விற்பனை செய்திருப்பதாக திருத்தங்கல் போலீஸார் 2007 மே 30-ல் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். ஜோதிலிங்கம் என்பவர் டாடா சுமோ காரை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு விற்றதாகவும் பிறகு அந்த கார், பாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால், பவர் ஸ்டார் சீனிவாசனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பவர் ஸ்டார் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.