தன்னை ட்விட்டரில் திட்டிய நபரை கைது செய்த போலீசாரிடம், அவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய். ரசிகர்களுடன் ட்விட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார் விஜய். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அசிங்கமாகத் திட்டினார். இதனால் விஜய்யும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் என். ஆனந்த் ரசிகர் மன்றத்தினரை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியவரை கண்டுபிடிக்கும்படி அறிவுறுத்தினார். அந்த நபர் பட்டாபிராமை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொருப்பாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில், அவதூறாக பேசியவர் வீட்டை முற்றுகையிட்டனர் ரசிகர்கள். அவரை பிடித்து பட்டாபிராம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் கணேஷ் என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
விஷயம் கேள்விப்பட்ட விஜய், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல.. ரசிகர்கள் தங்கள் வேலை மற்றும் குடும்பத்தினரைக் கவனிப்பதுதான் இப்போது முக்கியம் என்றும் அவர் கூறினார்.