நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்துக்கு இயக்குநர் என்றே பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தை ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ் சார்பில் ரங்காரெட்டி தயாரிக்கிறார். முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
மணிகண்டன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார் சுருளி.
இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் பூஜையுடன் தொடங்கியது. கிராமத்தில் இருந்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வரும் இளைஞர் ஒருவர், தான் ஒரு படம் இயக்க வேண்டும் என்றும், அப்படி இயக்கிய அப்படத்தின் 100வது நாள் விழாவில் தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்றும் நினைக்கிறார். அப்படி அவர் நினைத்தது போல நடந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.