கடந்த 20 ஆண்டுகளாக இசைத்துறையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைக் கல்லூரி, ரகுமானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. அக்டோபர் 24ம் தேதி ப்ரிக்லீ இசைக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில், சமீப காலமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிக புகழையும் கவுரவத்தையும் தேடித் தந்த’ ஸ்லம்டாக் மில்லினர், 127 ஹார்ஸ், எலிசபெத்: தி கோல்டன் ஏஜ், மில்லியன் டாலர் ஆம்’ ஆகிய படங்களில் இடம்பெற்றுள்ள ரகுமானின் இசை தொகுப்பு ஒலிபரப்பப்பட உள்ளது. தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை உலகிற்கு ஏராளமான பங்களிப்பை தந்துள்ள இத்தகைய சிறப்பான இசைக் கல்லூரியிடம் இருந்து கவுரவ டாக்டர் பெறுவதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். அதிலும், வருங்காலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இசை உலகில் அவர்களின் கனவுகளை அடைவதற்கு என் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பது எனக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன், என்றார்.